கடந்த வாரம் முழுவதும் லட்சுமி ராய் பற்றிய ஒரு செய்தி மீடியாவில் பிரதானமாக இடம்பிடித்தது.
அது, ‘தாண்டவம் படப்பிடிப்புக்காக லண்டன் போன லட்சுமிராய், நட்சத்திர ஓட்டலில் ரூம் வசதியாக இல்லை என்று கூறி தகராறு செய்தார்’ என்பதுதான்.
இந்த செய்தி உண்மைதானா என்ற குறைந்தபட்ச உறுதிப்படுத்தல் கூட செய்யாமல் அவசர அவசரமாக பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுவிட்டன. இதில் லட்சுமி ராய்க்கு கொஞ்சமல்ல… ரொம்பவே வருத்தம்.
உண்மையில் நடந்தது என்ன?
லட்சுமி ராயே சொல்கிறார், “நான் எந்த ஹோட்டலிலும் தகராறு செய்யவில்லை. அப்படிப்பட்ட பெண்ணுமல்ல நான். ஒரு பிரபலமாக இருந்து கொண்டு, பொது இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியுமா..?
உண்மையில் அன்று நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு சென்று, எனக்கு ஒதுக்கப்பட்ட அறையைக் கேட்டேன். அதில் வேறு யாரோ தங்கியிருந்தனர். எனது அறையை எப்படி மற்றவர்களுக்கு ஒதுக்கினார்கள் என்று தெரியவில்லை. எனவே எனக்கான அறையைத் தருமாறு அவர்களிடம் கூறிவிட்டு, வரவேற்பரையில் காத்திருந்தேன்.
அப்படியும் கூட அந்த அறை கிடைக்கவில்லை. வேறு ஹோட்டலில் வேறு அறையைத்தான் தந்தார்கள். நான் மறுப்பேதும் சொல்லாமல் அதில்தான் தங்கினேன்.
ஆனால் அதற்குள் யார் என்ன சொன்னார்களோ… விஷயம் வேறு மாதிரி பரவி, என்னமோ நான்தான் பிரச்சினையைக் கிளப்பியதாக செய்தி வந்துவிட்டது.
இப்படித்தான் நான் தனி விமானத்தில் சென்னை வந்ததாக சில தினங்களுக்கு முன் சொன்னார்கள். அப்புறம் உண்மையைச் சொன்ன பின் அமைதியானார்கள்,” என்றார்.
பரபரப்புக்காகவும் தங்களது பிரசுரிப்புகளை அதிகம் பேர் பார்க்கவேண்டும் என்கிற நோக்கிலும் சில ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொள்வது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. அப்படிப் புகழ்பெற்ற ஒருவரைப் பற்றியத் தவறான தகவல்களை பிரசுரிப்பதன் மூலம் சம்பந்தப் பட்ட நபருக்கு மனவருத்தம் ஏற்படுவது மட்டுமின்றி படிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களின் பொன்னான நேரங்களும் வீணடிக்கப் படுகின்றன என்பதை சம்பந்தப் பட்ட ஊடகங்கள் கவனத்தில் கொள்வார்களா..?
-விஜய் ஆனந்த்.K




