இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகும் படமான நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்காக தனது தந்தை இசைஞானியின் இசையில் “சாய்ந்து சாய்ந்து” என்னும் பாடலைப் பாடிய யுவன் ஷங்கர் ராஜா, “ இந்த வாய்ப்பைக் கொடுத்த கெளதம் வாசுதேவ மேனனுக்கு நன்றி… நாங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத இசை…. இது தான் இசை… இந்தப் பாடலைப் பாட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்…தந்தையின் இசையில் பாட மாதவம் செய்திட வேண்டும்” என்று கூறினார். 
இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனனின் படைப்புகள் அவரது கதை சொல்லும் நேர்த்திக்காகவும் கலை நயத்துடன் எடுக்கப்படும் பாடல் காட்சிகள் மற்றும் இசைக்காகவும் அனைத்து தரப்பட்ட மக்களாலும் பாரட்டப்படும் படங்களாக இருக்கும்.
தனது நிறுவனமான போட்டான் கத்தாஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் நீ தானே என்பொன் வசந்தம் படத்திற்காக முதல் முறையாக கெளதம் வாசுதேவ மேனனும் இளையராஜாவும் இணைவது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்தப் படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தையின் இசையில் ஒரு பாடலைப் பாடியிருப்பது அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.




