ஃபேஸ்புக்கில் அமர்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாது. பல நேரங்களில் நமது நேரம் வெட்டியாய்ப் போகிறதென்று வைத்துக் கொண்டாலும் சில நேரங்களில் நம் சிந்தனைக்கு விருந்தாக கவிதைகள், கட்டுரைகள் என்று நண்பர்களின் பதிவுகள் அல்லது நண்பர்களின் நண்பர்களின் பதிவுகள் என்று கொட்டிக் கிடக்கும். அந்த வகையில் பாடலாசிரியர் Niranjan Bharathi யின் நண்பரான Karthi Keyan ஃபேஸ்புக் சுவரில் அவர் எழுதிய கவிதை அவரது அனுமதியுடன் மைசிக்ஸர் வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கப்படுகிறது. பல வித கவிச்சிகள் மத்தியில் மணக்கும் உயர்ந்த வாசனையாம் உயிர் வாசனை என்று தாயைச் சிறப்பித்த விதமும் அதே கவிதையின் முற்பகுதிகளில் பெண்குழந்தை பிறந்தால் உறவினர்களின் – மனம் போகிற போக்கும் – ஒரு கெட்ட வாசனையாகச் சொன்ன விதமும் அருமை. வாடிப்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் வடுகப்பட்டியைச் சேர்ந்த கவிப்பேரரசுவிடம் பரிசுகளும் பாராட்டுகளும் வாங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாய்ப்பால்
பொட்டப்புள்ளையா என்று
அலட்சியமாய்க் கேட்கும்
அப்பனின் குரலில்
சாராயக் கவுச்சி…
அவசரமாய் அய்யனாருக்கு
ஆடு நேர்ந்துவிடும்
தாத்தாவின் குரலில்
இரத்தக் கவுச்சி…
தங்கத்தின் விலை சொல்லி
அங்கம் சிலிர்க்கும்
பாட்டியின் குரலில்
வெற்றிலைக் கவுச்சி…
தங்கச்சி பாப்பா என்று
அழுத்தமாய் கன்னம் கிள்ளும்
அக்காவின் கைகளில்
ஈரமண் கவுச்சி..
முனகலுடன் கண் திறந்து
அந்தக் களைப்பிலும் பாலூட்டும்
அம்மாவின் மார்பில்
உயிர் வாசனை…




