எந்த ஒரு குறிப்பிட்ட வட்டத்திலும் சிக்காத நடிகராக இருப்பதையே விரும்புகிறார் சேத்தன். அழுத்தமான பாத்திரங்கள், ஆயிரக்கணக்கான எபிசோட்கள் என்று லட்சக்கணக்கான ரசிகர்களின் வீட்டில் தனக்கென ஒரு நாற்காலியை அமைத்துக் கொண்டவர் சேத்தன். இந்த 'மர்மதேசம்’ நாயகனை எவராலும் மறக்க முடியாது தான்.
தொடர்ந்து, தாம் தூம் வாயிலாக திரைப்படத்துறையிலும் கால்பதித்த சேத்தன் தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்களில் நடித்து விட்டார். இருந்தாலும், அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம் என்கிற ஆதங்கம் அவருக்கு இருக்கிறது. எனினும், காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்கிற கனவுடையவராக சிறகை விரிக்க ஆசைப்படுகிறார்.
இதோ அவரே பேசுகிறார்.
"நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த போது வலை வீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா .தாம் தூமில், கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது எனது Timing டைமிங் மற்றும் முக பாவனைகளைப் பார்த்து உங்களுக்கு காமெடி நல்லா வரும் போல இருக்கே.. என்றார். அப்புறம், ஏன் என்னை சீரியசாகவே காட்ட முயற்சி செய்கிறீர்கள் என்றேன். 'மர்மதேசம்' தொடர் செய்த வேலை இது, என்றார். அந்தளவுக்கு 'மர்மதேசம்' தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அடிப்படையில் எனக்கு நகைச்சுவையுணர்வு அதிகம் உண்டு.
நான் முதலில் ஒப்பந்தமானது 'தாம் தூம்' என்றாலும் முதலில் வெளியான படம்' பொல்லாதவன்'. அதன் பிறகு நிறைய படங்கள் . நான் நடித்தவற்றில் குறிப்பிட்டுப் பெருமைப்பட வைத்த படம் Revelations. இது நான் நடித்து 2016 ல் வெளிவந்தது. இந்தப் படம் மும்பை, கல்கத்தா, புனே என்று பல வெளியூர்களில் திரையிப்பட்டு பலரின் பாராட்டுகளைப் பெற்றது, என்னை மிகவும் மகிழ்வித்த திரை[ப்படமாகிப்போனது.
கடைசியாக வந்த படம் 'தமிழ்ப்படம் . 2. 'அதே இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர்..
எனக்கு, நேர்மறையான, எதிர்மறையான மற்றும் நகைச்சுவை என்று அனைத்துக் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கு நாசர் தான் முன்னோடி. அவர் எல்லாமும் ஏற்று நடிப்பார். எந்த வட்டத்திலும் சிக்காததால்தான் அவரால் காலம் கடந்து நிற்க முடிகிறது. நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன்." என்கிறார்.
மனைவி தேவதர்ஷினி மற்றும் மகளும் நடிக்க வந்துவிட்டாரே என்று கேட்டதற்கு..
என் மனைவி தமிழ் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள்' 96' படத்தில் நடித்தார். இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி யிருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமா வே குடும்பம். குடும்பமே சினிமா என்றிருக்கிறோம்." என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா , சசிகுமாரு டன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.