சீமான், புகழ், சுபப்பிரியா, தியேட்டர் லேப் ஜெயராஜ் ஆகியோர் நடிக்க மு.களஞ்சியம் இயக்கியிருக்கும் படம் முந்திரிக்காடு. கவி பாஸ்கர், இளைய கம்பன் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளம் அறிமுகம் ஏகே பிரியன். இந்தப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட சீமான், ”அரசியல் ரீதியாகத்தான் விடுதலை பெற்றிருக்கிறோம், மத, சாதீய, பொருளாதார விடுதலைகளை நாம் இன்னும் பெறவில்லை..” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "களஞ்சியத்தின் கனவுப்படைப்பாக முந்திரிக்காடு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நான் இடம் பெற்றதற்காக மிகவும் மகிழ்கிறேன். தம்பி பிரியன் மிகவும் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். தம்பி களஞ்சியம், இமையத்தின் எழுத்தை அப்படி திரையில் வார்த்தெடுக்கிறார். இமையத்தின் எழுத்தை நம்பி தான் மு.களஞ்சியம் படத்தைத் தயாரித்தும் இருக்கிறார். புரட்சி என்றால் என்ன என்று எங்களுக்கு கற்று கொடுத்த மகேந்திரனின் மகன் தம்பி புகழுக்கு பட்டம் கொடுக்கச் சொன்னார் ராஜு முருகன். இங்கு எழுச்சி புரட்சி என்றால் என்ன என்பதே தெரியாதவன் எல்லாம் பட்டம் வைத்திருக்கிறான். அதனால் இந்தப் பட்டத்திற்கு தகுதியானவரின் மகனான தம்பி புகழுக்கு எழுச்சி நாயகன் என்ற பட்டத்தைக் கொடுக்கலாம். சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. தலைக்கு தொப்பி தைக்கிறவன் உயர்ந்தவன் காலுக்குச் செருப்பு தைத்தவன் கீழானவன் என்கிறான். இந்த முந்திரிக்காடு படம் பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு விழாவில் ஒரு நடிகர் பேசுகிறார். திஸ் பிலிம்ல சாங்க்ஸும், பைட்டும் பெண்டாஸ்டிக்கா வந்திருக்கு" என்கிறார். இந்தச் சனியன்களை வைத்து என்னடா பண்றது. நாக்குல கூட தமிழ் சரியா வரலியே நீங்க எப்படிடா நாட்டை சரி பண்ணுவீங்க. புறநானூறு சொல்கிறது நான்கு சாதிகள் தவிர இல்லை. எந்தச் சொல் உன்னை இழிச்சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறதோ, அந்தச் சொல்லை உனது ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். பெயரையே மொழியாக வைத்துக் கொண்ட சமூகம் நம் சமூகம்.
சாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சாதிமத உட்பகை தான் நம்மை வீழ்த்துகிறது. நம்மை ஒற்றுமையாகாமல் பார்த்துக் கொள்கிறது. சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வணங்கிவதற்கே தகுதி இல்லாதவன் . அவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகப் போய்விடும். என்கிறார் முத்துராமலிங்கத்தேவர். சாதிய விடுதலை, மதவிடுதலை, பொருளாதார விடுதலை, எதுவுமே இன்னும் இந்தியா பெறவில்லை. வெறும் அரசியல் விடுதலை மட்டும் தான் பெற்றுள்ளோம். மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும்போது எவனும் சாதி பார்ப்பதில்லை. காரணம் சாதிக்கு ரத்தவெறி இருகிறது, ஆனால் ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை. கோயில்களில் இருக்கும் சாதி திரையரங்களில் செத்துப்போய்விட்டது. அதனால் இப்போது திரை அரங்குகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்திய நிலத்திலே பெருமைக்குரியவர் அய்யா நல்லக்கண்ணு தான். நாங்கள் பொழுது போக்கிற்காகப் போராடவில்லை. எங்களுக்கு அடுத்த தலைமுறையாவது நன்றாக வாழவேண்டும் என்று தான் போராடுகிறோம். அப்படியான போராட்டக்காரர்களில் ஒருவனான தம்பி களஞ்சியம் இயக்கி இருக்கும் முந்திரிக்காடு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும். இதைப் படமாக நான் பார்க்கவில்லை. ஒரு அரசியல் களமாகப் பார்க்கிறேன். இந்தப்படம் பெரிய அதிர்வலைகளை கிளப்பும்" என்றார்