தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'. மீதமுள்ள 25% படமும் கூட இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள சிறு சிறு தீவுகளில் வளர்ந்து வருகிறது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க , இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார்.
தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, தானே தயாராகி உள்ளார். நீண்ட முடி, தாடி சகிதம் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்துவருவது கூடுதல் தகவல்.
கடல் என்ற கதைக்களத்திற்கும் ’ஜூவாலை’ என்கிற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டபோது, “காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஜூவாலை மாதிரிதான், அவை நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது…
அதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலை தான். நமக்கான வாழ்வாதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உடல், கடல் மாதிரி இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கும் உணர்வுகள் நன்மை, தீமை அடங்கிய ஜூவாலையை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.
நமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும்போது அங்கு பழிவாங்கும் ஜூவாலை பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது.
ஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான்.. அது கடல் என்ற கதைக்களத்தில் வெளிப்படுகிறது..” என்று நீண்ட விளக்கம் கொடுக்கிறார் இயக்குநர் ரஹமான்.
லண்டனைச் சேர்ந்தவரும் பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவருமான ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார். இவர், முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள தீவுகளில் படம், பிரமாண்டமாக வளர்ந்து வருகிறது