R.கண்ணன் இயக்கத்தில் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே”.
இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய..
படத்தொகுப்பாளர் செல்வா…
“தள்ளிப்போகாதே” தியேட்டரில் வெளியாவது மனதிற்கு மகிழ்ச்சி இப்படத்தில் அதர்வா சிறப்பாக நடித்துள்ளார். அமிதாஷும் அதிகம் பேசாமல் அழகாக நடித்துள்ளார். நாயகி மேல் பயணிக்கும் கதை, அனுபமா அதை நன்றாக செய்துள்ளார்…”என்றார்
Magic Rays சார்பில் திருவேங்கடம்..
“நான் 10 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன் நிறைய படங்கள் வெளியீடு செய்துள்ளோம். நான் இதுவரை பார்த்த படங்களிலேயே தள்ளிப்போகாதே மிக அருமையான படம். அதர்வாவிற்கு இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும். அமிதாஷ் அட்டகாசமாக செய்துள்ளார். தயாரிப்பாளர் ராம் பிரசாத் தான் இப்படம் வெற்றிகரமாக வந்ததற்கு முழுக்காரணம். பாடல்கள் மூலம் கபிலன் அனைவரையும் கவர்ந்துள்ளார். இப்படம், ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்..”என்றார்.
அமிதாஷ்
”மூன்று கதாப்பாத்திரங்களுக்குள் நடப்பதுதான் இந்த கதை இந்த பாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. இது போல் ஒரு பாத்திரம் முன்பு நான் செய்ததில்லை. அனுபமா இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சிலரை முதல் முறை பார்க்கும்போதே பிடித்துவிடும், அதர்வா அந்த மாதிரியான நபர். அவருடன் இந்தப்படத்தில் மிகவும் நெருக்கமான நண்பனாகி விட்டேன். இந்தபடம் அவரின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்..”என்றார்.
இயக்குநர் R.கண்ணன்…
“ஜெயங்கொண்டானில் ஆரம்பித்த பயணம் 10 படங்கள் வரை வந்துள்ளது. அதற்கு முழுக்காரணம் தியாகராஜன் அவர்கள் தான். கண்டேன் காதலில் எப்படி ஒரு பாராட்டு கிடைத்ததோ அதே போல் இப்படத்தில் கிடைக்கும் என நம்புகிறேன். அதர்வா தான் இந்தப்படத்தை முதலில் என்னிடம் அறிமுகம் செய்தார். பின் முறையாக அனுமதி வாங்கி செய்துள்ளோம். இந்தப்படம் எந்த இடத்திலும் ஒரு முகச்சுளிப்பு இல்லாமல், பார்க்க முடிகிற படமாக இருக்கும். இந்தபடத்திற்கு ராம் பிரசாத் மிக ஆதரவாக இருந்தார். கோபுரம் பிலிம்ஸ் அன்பு இந்தப்படம் உருவாக மிகமிக உதவி செய்துள்ளார். கபிலனுடன் தள்ளிப்போகாதேவுக்கு பிறகு தொடர்ந்து பயணித்து வருகிறேன். மிக அற்புதமான எழுத்தாளர். அமிதாஷ், சரியாக செய்தால் தான் இந்தப்படம் எடுபடும், அதை உணர்ந்து செய்துள்ளார். இந்தப்படம் நன்றாக வர மிக முக்கிய காரணம் அதர்வா மற்றும் அனுபமா தான். இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். இப்படம் தமிழ் சினிமாவில் அழுத்தமான பதிப்பாக இருக்கும்..”என்றார்
கபிலன் வைரமுத்து..
“தள்ளிப்போகாதேவிற்கு வசனமும் பாடல்களும் எழுதிய தருணம் அந்த படத்தின் ஒரு கதாப்பாத்திரமாகவே மாறியது போல் இருந்தது. இந்த பொது முடக்க காலத்தில் புன்னகையுடன் ஒருவரை பார்ப்பதே அரிதாக இருந்தது ஆனால், இயக்குநர் கண்ணன் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்தார். நண்பர் ஒருவர் தமிழ் சினிமாவில் ரத்தம் தெறிக்காமல் வன்முறை இல்லாமல் படங்களே வராதா எனக்கேட்டார். இதோ தள்ளிபோகாதே வருகிறது இது மனதிற்கு இனிமை தரும் படமாக இருக்கும். அதர்வாவை திரையில் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. அனுபமா, அபிதாஷ் அதர்வா என்று மூவருமே ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்..” என்றார்.
தயாரிப்பாளர் TG தியாகராஜன்…
”தள்ளிப்போகாதே டிரெய்லர் அற்புதமாக இருந்தது. நல்ல காதல் திரைப்படம் என்பது திரையில் தெரிகிறது. ஒளிப்பதிவு அபாரமாக இருந்தது. அதர்வாவை அவர் அப்பா எங்கள் நிறுவனத்தில் படம் செய்ததிலிருந்தே தெரியும். முரளியும் நானும் நண்பர்களாகவே பழகினோம். அவர் எங்கள் நிறுவனத்திம் பாணா காத்தாடியில் அறிமுகம் செய்தோம். இந்தப்படத்தில் நிறைய முன்னேறி விட்டார். அனுபமா, அமிதாஷ் இருவரும் நன்றாக நடித்துள்ளார்கள். படத்தை பார்த்து விரும்பி விநியோகஸ்தர் வெளியிடுவது மனதிற்கு மகிழ்ச்சி.
நானும் மணிரத்னமும் மிக நெருங்கிய நண்பர்கள் அவரும் நானும் நிறைய கதை பேசுவோம். மணியின் கன்னட படமான பல்லவி அனு பல்லவி பார்த்து பிரமித்தேன். அவர் அப்போது என்னிடம் கதை இருக்கிறது படம் செய்யலாம் என்று சொன்னவுடன் செய்யலாம் என்று செய்தேன், அப்படித்தான் பகல்நிலவு உருவானது. எங்கள் நிறுவனம் சீரியல் செய்த போது கண்ணன் எங்களுடன் வேலை செய்தார். அவர் மணிரத்னத்துடன் வேலை செய்துவிட்டு வந்தபோது, மணிரத்னம் அவரை பற்றி பெருமையாக சொன்னார். அவரிடம் மிகப்பெரிய திறமை இருக்கிறது. அதர்வாவிற்கு இதயம் மாதிரி இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்..:என்றார்.
அதர்வா…
”நானும் கண்ணனும் ஒரு காதல் படம் செய்யலாம் என பேசியபோது, இந்தப்டம் எங்கள் பேச்சில் வந்தது. அந்தக்கதையை தமிழுக்கு மாற்ற, கபிலனை தவிர வேறு யாருமே எங்கள் மனதில் வரவில்லை. நாங்கள் நினைத்தது போல் தமிழில் மிக அழகாக மாற்றி தந்தார். இந்த படத்திற்கு எங்கள் முதல் சாய்ஸாகவே அனுபமா தான் இருந்தார். அமிதாஷ் பாத்திரத்திற்கு நிறைய பேரை பார்த்தோம் கடைசியாக தான் அவர் வந்தார் அற்புதமாக செய்துள்ளார். கண்ணன் வேலை செய்யும் வேகம் பற்றி நிறைய பேர் சொல்லி விட்டார்கள். இந்தபடத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்கு தாடி வளர்க்க வேண்டும் நான் தாடி வளர்த்த மூன்று வாரங்களில் வேறு ஒரு படத்தையே முடித்து விட்டு வந்துவிட்டார். அவ்வளவு வேகமாக வேலை செய்யக்கூடியவர். அனுபமா அற்புதமான நடிகை, இதில் அவரை எல்லாருக்கும் பிடிக்கும். தியாகராஜன் அவர்கள் தான் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் இங்கு வந்து என்னை வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்..” என்றார்.
இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். Magic Rays நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது