புதுமையான ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “குறுக்கு வழி”. இப்படத்தை N.T. நந்தா எழுதி, இயக்கியதோடு மட்டுமின்றி, ஒளிப்பதிவு செய்து இசையமைத்துமுள்ளார்.
K சிங் மற்றும் A.ஷர்மா இணைந்து தயாரித்துள்ளனர். துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்ஷி அகர்வால், ஷிரா கார்க் மற்றும் மிப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
.
இப்படம் குறித்து, தயாரிப்பாளர்-இயக்குநர்-ஒளிப்பதிவாளர்-இசையமைப்பாளர் N.T.நந்தா கூறுகையில், “நான் இதற்கு முன்பு 2017ல் வெளியான வல்ல தேசம் என்ற தமிழ்ப் படத்தைத் தயாரித்து இயக்கினேன். அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது நான் 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறேன், அதற்கு நான் ஒளிப்பதிவும் செய்துள்ளேன். நாங்கள் இப்படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம், 2022ல் இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளை செய்து வருகிறோம். இதற்கிடையேயான தருணத்தில் தான் , ‘குறுக்கு வழி’ யை உருவாக்கத் துவங்கினோம். தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு இணையாக தொழில்நுட்ப மற்றும் கதை அம்சங்களில் உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. லண்டனைச் சேர்ந்த K சிங் மற்றும் A ஷர்மா தமிழ் திரைப்படம் தயாரிக்க முழு ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அடுத்தடுத்து எனது இயக்கத்தில் உருவாகவுள்ள திரைபடங்களை அவர்களே தயாரிக்கிறார்கள், அவை பிரமாண்டமாகவும் பெரிய அளவிலும் உருவாக்கப்படும். ஒரு நல்ல தமிழ் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
கொரோனா தொற்றுநோய் கட்டத்தின் கடினமான காலங்களில் கூட என் கனவை கைவிடவில்லை. அந்த நேரத்தில் நான் இங்கேயே தங்கி, திரைப்படத்தை முடிக்க முடிவு செய்தேன். நான் திரைக்கதை எழுதி முடித்ததும், அந்தந்த கதாபாத்திரங்களுக்கு இங்கு இந்த மண்ணில் வாழும் நபர்களை தேர்வு செய்யவே எண்ணினேன், துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்ஷி அகர்வால், ஷிரா கார்க் மற்றும் மிப்பு ஆகியோர் இந்தப் படத்திற்காக முழு அர்ப்பணிப்பை தந்து, நடித்துள்ளார்கள்.
படத்தின் டீசரை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம், டீசர் எங்களின் உழைப்பை இப்படத்தின் முழுப்பெருமையையும் வெளிப்படுத்தும் என நம்புகிறேன். எங்கள் திறமையை வெளிப்படுத்தும் முதல் கட்டமாக குறுக்கு வழி திரைப்படம் இருக்க வேண்டும் என, இப்படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளோம், குறைந்த பட்ஜெட்டில், குறைந்த இடங்களிலேயே படமாக்கியிருந்தாலும், இப்படம் சிறந்த தொழில்நுட்ப தரத்தில் இருக்கு..” என்றார்.
பாடலாசிரியர் மற்றும் நடிகர் சினேகன் கூறியதாவது,“ இந்த திரைப்படத்தில் இணைந்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி, இந்த படத்தில் நான் இணைந்ததற்கு காரணம் இயக்குநர் நந்தா தான். லண்டனில் பிசியாக இருக்கும் நந்தா, தமிழ்நாட்டிற்கு வந்து நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார். அவர் பல திறமைகளை கொண்ட நபர். அவர் எல்லா துறைகள் பற்றியும் அறிந்தவர், அதை எளிமையாக கையாள தெரிந்தவர். இயக்குவதை தாண்டி, ஒளிப்பதிவையும் கவனித்துள்ளார். இந்த படத்தில் நான் பாடல்வரிகள் எழுதியுள்ளேன் மற்றும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளேன். படத்தின் முதன்மை கதாபாத்திரம் திருடனாக வரும், அப்போது நல்லவனாக இருக்கும் ஒருவன், இவர்களை சந்தித்த பிறகு என்ன ஆகிறான், அவன் நல்லவனா கெட்டவனா என ஊசலாடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.” என்றார்.
நடிகர் துருவா கூறியதாவது. “குறுக்கு வழி திரைப்படம் நான்கு திருடர்களை பற்றிய கதை, அதில் நானும் ஒருவன். நான் இதுவரை எனது திரைப்பயணத்தில் எதிர்மறை கதாபாத்திரம் செய்ததில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக உலகதரம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். ” என்றார்.
நடிகர் பிரனய் கூறியதாவது...“இந்த படம் ஒரு நல்ல தியேட்டர் அனுபவமாக இருக்கும்..” என்றார்.
நடிகை ஷிரா காக் கூறுகையில், “இந்த ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம் எங்கள் படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திரைப்படம் தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த பர்ஸ்ட் லுக் படத்தின் தரம் மற்றும் ஒரு குழுவாக நாங்கள் உழைத்த கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது..” என்றார்.