படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகியிருப்பது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெலியிட்ட செய்தியில், ”வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவான பிக் ஸ்க்ரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு ‘ஏழு கடல் ஏழு மலை’ போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம். இதை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவினை சிறப்பாகக் கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும், படத்திற்கு மிக பக்கபலமாக நின்ற ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமாருக்கும், ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.சர்வதேச அளவில் முதல் முறையாக சிறப்புக்குரிய ஒரு விருதிற்கான தேர்வில் எமது நிறுவனத்தின் படைப்பை உலக அரங்கில் கொண்டு நிறுத்தியுள்ள எங்கள் இயக்குநர் ராமிற்கு முதல் நன்றி…” என்று குறிப்பிட்டுள்ளார்.