கஷ்டத்தின் அடி ஆழம் தொட்டவர்

உச்ச இயக்குநர் ஷங்கர்

99

இயக்குனர் ஷங்கர் என்றாலே, பிரம்மாண்டம் பிரம்மாண்டத்தின் உச்சம் என்று தான் இன்றைய தலைமுறையினருக்கு தெரியும். ஆனால் இந்த பிரம்மாண்டத்தை தொடர் அவர் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது, இந்த பிரம்மாண்டத்தின் மைனஸ் பிரமாண்டம் என்கிற அளவில் இருந்து தனது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார். கஷ்டத்தின் அடியாழம் வரை சென்று, இன்று அதைவிட அதிகமான உச்சத்தை தொட்டிருக்கிறார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட முகங்களில் ஷங்கர் முதன்மையானவர் என்றால் அது மிகை ஆகாது. மிகச் சிறந்த படைப்புகளை கொடுக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல, எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் முயற்சி செய்து கொண்டே இரு ஒரு நாள் உன் இலக்கை அடையலாம் என்பதற்கும் இன்றைய தேதியில் அவர்தான் மிகச்சிறந்த உதாரணம்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை யாரும் சொல்லிடாத விஷயங்களை நடிகர் காதல் சுகுமார் பகிர்ந்திருக்கிறார்.

 

அவர் எழுதியது எழுதியபடி…

நன்றி காதல் சகுமார்

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து,
BE படித்து அமெரிக்கா சென்றுவிடும் கனவுடன் BEக்கு அப்ளிகேஷன் மட்டும் போட்டுவிட்டு அதுவாகவே வந்துவிடும் என நம்பி அதை சரியாக வாங்கத்தெரியாமல் கோட்டைவிட்டு,

பிறகு, ITI படித்து, எதோ ஒரு ஃபேக்டரியில் மாதம் 600 ரூபாய்க்கு வேலைக்கு சென்று, தொழிலாளர்கள் சங்க குழப்பத்தில் ஜெயிலுக்கு சென்று,
தன் போக்கில் வாழ்ந்து, உதை வாங்கினாலும் எப்படியாவது “பெரியாள்” ஆகி விடலாம் என்று கஞ்சா விற்க ஆந்திரா சென்று, இருந்த பணத்தையெல்லாம் கோட்டைவிட்டு, திருப்பதியில் மொட்டைப்போட்டுக்கொண்டு அகோரப்பசியில் கிடைத்தவற்றை தின்று நடந்தே சென்னை வந்து வீடு சேர்ந்து…
சின்ன சின்ன பட்டாசு கடை நடத்தி நஷ்டப்பட்டு..சேலைகளை வாங்கி வீடு வீடாகச் சென்று விற்று எதுவும் முடியாமல்..

அவர்கள் காலனியில் இருந்த தெலுங்கு மக்களுடன் சேர்ந்து நாளெல்லாம் ரியல் எஸ்டேட் செய்கிறேன் என சீட்டாட்டம் ஆடிக்கொண்டு சுற்ற…வீட்டின் ஒரே வருமானம் ஆன அப்பாவின் உடல்நிலை பாதிக்கப்பட… வறுமை குடிகொண்டு ஒரே ஒரு வேளை மட்டும் சுக்காரொட்டிகள் தின்று, ஊர்சுற்றி ஒன்றும் முடியாமல் எதோ ஒரு நாடகக் கம்பெனியில் ஒரு எலெக்ட்ரீஷியனாக சாதாரண வேலைக்கு சேர….

சின்ன வயதில் இருந்தே தனக்கு இருக்கும் நடிக்கும் திறன் மற்றும் மிமிக்ரி ஆர்வத்தை அங்கே வெளிபடுத்தும் போது நடிக்க வாய்ப்புகள் கிடைக்க அதை பயன்படுத்திக் கொண்டு அந்த நாடகக் கம்பெனியில் இருந்துக்கொண்டே தமிழ் சினிமாவில் மிகப்பெரும் காமெடி நடிகனாக உருவாகவேண்டும் என்று லட்சியம் கொண்டு ஒவ்வொரு கதவாக தட்ட யாரும் அவரை சீண்டிய பாடு இல்லை..

நாடகங்களில் இவரது ஒன்லைனர்கள் பிரபலமாகி சங்கர் எனும் காமெடியன் மெல்ல மெல்ல கவனம் பெற..

இவர் காமெடியனாக நடிக்கும் நாடகத்தை ஒருமுறை பாக்கியராஜூம் ரஜினிகாந்தும் பார்க்க வருகிறார்கள்…எப்படியாவது அவர்களை தன் நகைச்சுவை நடிப்பினாலும் காமெடி ஒன்லைனர்களாலும் இம்ப்ரஸ் செய்துவிடவேண்டும் என்று பரவலாக மெனக்கெட்டு இவரின் காட்சி வருகைக்காக ஆர்வத்துடன் காத்திருக்க..இவர் வந்து பர்ஃபார்மெண்ஸ் செய்யும் ஐந்தாவது காட்சி வருவதற்கு முன்பாகவே அவர்கள் இருவரும் அவசரமாக கிளம்பி சென்றுவிட சோர்ந்து போகிறார்…

மீண்டும் அதே நாடக கம்பெனியில் எடிபுடி வேலைகள் செய்து, சின்ன சின்ன காமெடிகளில் தலைகாட்டிக்கொண்டு இருக்க ஒரு முறை எஸ் எ சந்திரசேகர் நாடகம் பார்க்க வந்து இவரை கவனிக்கிறார்.

என்னுடைய அலுவலகத்தில் வேலை இருக்கிறது செய்கிறாயா? என்று அவர் கேட்க உடனே தலையாட்டி அங்கே வேலைக்கு சேர்ந்து எப்படியாவது இவரது படங்களில் நடித்து மிகப்பெரும் காமெடியனாகி விட வேண்டும் என்று எண்ணம் இவருக்கு…ஆனால் கிடைத்ததென்னவோ உதவி இயக்குனர் வேலை..

அந்த வேலை பிடிக்காமல், சதா காமெடி நடிகனாகும் ஆசையிலேயே சுற்றிக்கொண்டு ஏனோதானோ என வேலை செய்ய எஸ் ஏ சந்திரசேகர் ஒருநாள் இவரை கடுங்கோபத்தில் எல்லோர் முன்பாகவும் போட்டு வெளுக்க அன்றிலிருந்து மிகவும் ஷார்பான ஒரு ஆளாக உருவாகிறார்.

படம் எடுக்கிறோமோ? இல்லையோ? ஆனால் தன்னிடம் இருக்கும் உதவி இயக்குனர்களுக்கு மாதாமாதம் முறையான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் பாணி.. எனவே இவருக்கு மாதாமாதம் சம்பளம் பிரச்சனையில்லை.. அதுவும் இல்லாமல் எஸ் ஏ சி ஒரு பிஸியான காலகட்டத்தில் ஓடிக்கொண்டிருக்க வீட்டின் வறுமையை கொஞ்சம் கொஞ்சம் போக்க கிடைத்த வாய்ப்பாகவே அதை பார்க்கிறார்.

ஒரு இயக்குனர் ஆகும் ஆசையே இல்லாமல் உதவி இயக்குனர் வேலை தான் உலகில் மகத்தானது என்று நினைத்துக்கொண்டு அங்கே காலம் தள்ள எஸ் ஏ சந்திரசேகரனனின் ஆஸ்தான இணை இயக்குனராக உயர்கிறார். 16 படங்கள் அவரிடம் வேலை செய்திருக்கிறார்.

தனக்கு முன்பிருந்தவர்கள் தனக்கு பின்பு வந்தவர்கள் என அனைவருமே தனித்தனியாக சினிமா எடுக்க முயற்சிக்க இவருக்கு மட்டும் அந்த ஆர்வம் வராமலேயே இருந்தது. அது தேவையும் இல்லை என்று நினைத்திருக்கிறார்.. காரணம் எஸ் ஏ சந்திரசேகர் கொடுத்த அரவணைப்பு.. அடுத்து மாதாமாதம் கிடைக்கும் சம்பளம்..எக்காரணத்தை கொண்டும் அதை பாதகமாக்கிக்கொள்ள விரும்பியிருக்கவில்லை அவர்..

உடன் வேலை செய்த உதவி இயக்குனர்கள் சங்கரை உசுப்பிக்கொண்டே இருக்க தானும் ஒரு இயக்குனராக ஆகியே தீர வேண்டும் போல.. இல்லையெனில் இந்த உலகம் நம்மை மதிக்காது என்று நினைக்க… இவருடன் வேலை செய்த பவித்ரன் படத்தை ஆரம்பிக்கிறார் அவருடைய படத்தில் இணை இயக்குனராக வேலை செய்து வாய்ப்புகளும் தனியாக தேடிக்கொண்டு இருக்க பல சிக்கல்கள்..

பள்ளி நாட்களிலிருந்தே நடேசன் பார்க்கில் தான் அவரது பயணம் தொடங்கி இருக்கிறது என்பதால் அங்கேயே தினமும் அமர்ந்து கதையை உருவாக்குகிறார்.மகேந்திரனின் படங்களை போல உணர்ச்சிகுவியலாக ஒரு சப்ஜக்ட்…ஆனால் அதை யாரும் அப்போது இவரிடம் விரும்பவில்லை. எனவே கம்ப்ளீட் கமர்ஷியல் தான் வேண்டும் என நண்பர்கள் சொல்ல ஜெண்டில்மேன் கதையை அதே நடேசன் பார்க்கில் அமர்ந்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குகிறார்..

எந்தெந்த தயாரிப்பாளர்களிடமோ வாய்ப்பை தேடி அலைய யாரும் கை கொடுக்காமல் சோர்ந்துபோயி SACயிடமே மீண்டும் சரண்டர் ஆகிவிடலாம், சாப்பாட்டிற்க்கும் வேலைக்கும் எந்த பாதகமும் இருக்கப்போவதில்லை என நினைத்து அங்கே போக முடிவெடுக்க…

கடைசியில் இவர் ஏற்கனவே பவித்ரனுடன் வேலை செய்த இரெண்டு படங்களின் தயாரிப்பாளரான குஞ்சுமோன் இவரை அழைத்து வாய்ப்பு கொடுக்க..

தான் நிஜமாகவே ஒரு காமெடியன் அல்ல தான் ஒரு இயக்குனர் என்பதை அவர் அப்போதுதான் உணர்கிறார்.

ஒரு சினிமாவிற்கு புரோகிராம் செய்வது, ஷெட்யூல் போடுவது, பட்ஜட் எழுதுவது போன்றவை தான் மிக முக்கியம். அதுவே அந்த படத்தின் மொத்தகட்டமைப்பை தீர்மானிக்கும்..SAC அதில் கில்லாடி…மேலும் தன்னிடம் வேலை செய்யும் எல்லா இயக்குனர்களுக்கும் அதை திறமையாக சொல்லிக் கொடுத்து விடுவார் எஸ் ஏ சந்திரசேகரன். சங்கர் அவரிடமிருந்து அதை திறமையாக கற்றவர் மட்டுமல்ல அவர் வேலைசெய்த போது சில படங்களுக்கு அவரைவிட சிறப்பாக எழுதி கொடுத்து அசத்தியவர்…அந்த கலையை அங்கே கற்றதால் தன்னுடைய வெற்றிக்கு எப்போதும் SAC தான் காரணம் என்று பேசுவார்.

இதோ சங்கர் – ஷங்கர் ஆகிறார்.

அவருக்கு இயக்குனர் ஆகும் லட்சியம் எல்லாம் எதுவும் இருந்தது இல்லை. ஆனால் “செய்வன திருந்தச் செய்ய வேண்டும்” என்பது மட்டும்தான் அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. போகிறபோக்கில் என்னென்னமோ செய்துக்கொண்டே வந்தாலும், காமெடியனாகத்தான் இருப்பேன் என பிடிவாதமாக முயற்சித்தாலும் இயக்குனர் என்ற பிரம்மாண்ட அடையாளமே அவர். அவருக்குள் ஒரு திறமையான இயக்குனர் இருக்கிறான் என்று மிக தாமதமாகவே அவர் தெரிந்துக்கொண்டு இருக்கிறார்..

எந்தத் துறையாக இருந்தாலும் தனக்கு பிடித்த வேலையை நேர்மையாக திறம்பட செய்தால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை சங்கர் உணர்த்தி இருக்கிறார்.

இன்று இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள்…
“காதல்” எனும் படத்தை தனது முதல் தயாரிப்பாக S பிக்சரில் வெளியிட்டு என்னையும் நடிகருள் அடையாளப் படுத்தியவர்!!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாத்தியாரே!!!! .