a K. Vijay Anandh review
கமல் – ரஜினி – ஸ்ரீதேவி நடித்த மூன்று முடிச்சு படத்தின் ஜென்சி வெர்சனை பார்த்தது போல இருந்தது , ஓ பட்டர் பிளை பார்த்த போது.
அதே அப்பாவியான கமல்ஹாசனை போல அட்டுல் , அழகும் தவிப்புமான ஸ்ரீதேவி போல நிவேதிதா சதிஷ் , வில்லத்தனமான ரஜினியை போல சிபி சந்திரன் என்று இந்த மூவரும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள்.
அரேஞ்சுடு மேரியேஜ் பண்ண நிவேதிதாவுக்கு ஒரு பாஸ்ட் லவ் , அந்த லவ் கணவன் கல்லூரி தோழன், திருமண நாள் முதல் எல்லாமே எதிர் மறையாக நடக்க , எதையாவது செய்து முன்னேறத்துடிக்கும் அட்டுல் என்ன ஆகிறார் ? அதே தான் மூன்று முடிச்சு கமல்ஹாசன் மாதிரியே செத்தும் போகிறார்.
அட்டுல், நிவேதிதா , சிபி மூவருமே மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தனக்கு முன் இருக்கும் வாய்ப்பு என்ன என்று தெரியாமல் அட்டுல் தவிக்கும் இடங்கள் , எதாவது செஞ்சு வாழ்க்கை மாறிவிடாதா என்று தவிக்கும் இடம் , சிபி யுடன் விளையாடி தோற்று , சுவரை காமத்தீயால் நனைக்கும் இடம் என்று அவர் மீது ஒரு கரிசனத்தை சம்பாதித்து விடுகிறார்.
இன்னும் கொஞ்ச நாள் அட்டுல் தொந்திரவு செய்யாமல் இருந்திருந்தால் , அவருடன் சந்தோஷமான ஒரு குடும்ப வாழ்க்கைக்கு தயாராகியிருப்பார் நிவேதிதா. ஆனால் , விதி வலியதாகிற்றே. ஒரே ஒரு ஷாட்டில் , சிபி உடன் இருக்கும் போது , நிவேதிதா சிரித்துக்கொண்டே புரள்கிறார், அதில் அவ்வளவு அழகு. அதன் பின் முகத்தில் ஒட்டிக்கொள்ளும் சோகம் என்று சிறப்பாக நடித்திருக்கிறார்.
சிபி , அந்தக்கால ரஜினி ஆவி புகுந்தது போலவே , சிறப்பாக ஸ்டைலாக , அட்டுல் ஐ டீஸ் செய்யும் இடங்களில் அவ்வளவு வன்மம் , அதுவும் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளலாமல்.
நாசர் , இந்த மூன்று பொடிசுகளுக்கும் வேலைக்காரனாக , அடடா சொல்லும் கதாபாத்திரம்.
21 நாட்களே ஆயுசு கொண்ட வண்ணத்து பூச்சிகளை தனது பிள்ளைகளாக பாவிக்கும் அழகே அழகு!
கை பார்த்து குறி சொல்லும் மலை கிராமத்து சோடா புட்டி கிழவியாக வந்து பயமுறுத்தியிருக்கிறார் கீதா கைலாசம் , அவருடைய பேத்தியாக வரும் ஜனனியும் அருமை.
இளம் பெண் துறவியாக வரும் லட்சுமி பிரியா , அருமையான நடிப்பு .
சின்ன சின்ன காட்சி அமைப்புகளை உன்னிப்பாக பார்த்து ரசிக்கும் போது தான் படத்தின் சுவாரஸ்யங்கள் நன்கு புரியும்.
ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான களத்தை கொடுக்க வேண்டும் என்கிற இயக்குநர் விஜய் ரங்க நாத்தின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது.