a K. Vijay Anandh review
ஆணவக்கொலையை, இவ்வளவு கொடூரமாக செய்யமுடியுமா ? அதை அப்படியே திரையில் காட்ட முடியுமா ? என்கிற பதை பதைப்பான கேள்வி எழுகிறது இந்தப்படத்தை பார்த்து முடிக்கும் போது.
ஒரு உண்மைச்சம்பவத்தை அப்படியே ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வி ஆர் துதிவாணன்.
கலயரசன் மற்றும் தீபா பாலு ஆகியோருக்கிடையிலான காதல் மலரும் காட்சிகள், புதுமை. யூகிக்க முடியாத படி அழகாக எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
கலையரசனும் தீபா பாலுவும் அழகான கிராமத்து ஜோடிகளாக மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
ஒன்பது மாதக்கர்ப்பிணி மனைவியை குலதெய்வம் கோயிலுக்கு அழைத்து செல்லும் அந்த ஒரு நாளில் நடக்கும் கதை, வீடு திரும்புகிறார்களா ? இல்லையா ? முன்னரே சொன்னது போல பயமுறுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்து பலராலும் பாராட்டப்பெற்ற சூரி நடித்த கொட்டுக்காளியின் இன்னொரு பரிணாமம் தான் கொலைசேவல் படம்.
இதிலும், தீபா பாலுவின் அப்பாவாக வரும் கஜராஜ், கலையரசனின் நண்பனாக வரும் பால சரவணன் , நாயகியின் மாமாவாக நடித்திருப்பவர் என்று அனைவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பின்னணி இசையிலும் ஒளிப்பதிவிலும் மிரட்டியிருக்கிறார்கள்.
ஆணவக்கொலை என்று அசால்ட்டாக பெயரிட்டுவிடுகிறோம், உண்மையில் கொலைசெய்யப்படுபவர்கள் மட்டுமல்ல கொலைசெய்பவர்களும் அந்த ஒரு நொடியில் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள்.
இவர்களுக்கான முறையான ஆலோசனைகள் , காதலை வீட்டில் சொல்லி வெற்றிபெறும் தன்னம்பிக்கை, ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், முடியாத நிலையில் காதலை தியாகம் செய்யும் மனத்துணிவு என்று சமூகம் மாறவேண்டும். உயிர்களையும் வாழ்க்கையும் இழப்பதை விட, காதலை தியாகம் செய்வது சிறந்ததே!