a K Vijay Anandh review
கலப்படம் என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கு மட்டுமல்லாது இந்த பிரபஞ்சத்திற்குமே ஆபத்தானது,
கலப்படம், நீர் காற்று உணவு என்று நீக்கமற நிறைந்து விட்டது. அதையும் தாண்டி கொடூரமானது என்று சொல்லத் தக்க வகையில் கருவில் கலப்படம் என்கிற அதிர்ச்சியான விஷயத்தை மையப்படுத்தி டிராமா படத்தை இயக்கியிருக்கிறார், தம்பிதுரை மாரியப்பன்.
எப்பொழுது ஒன்று வியாபாரம் ஆகிறதோ அப்பொழுதே அங்கு கலப்படமும் தொற்றிக் கொள்கிறது.
படத்தின் இறுதி காட்சியில் ஆண்மை என்றால் என்ன என்று சஞ்சீவ் பேசும் வசனங்கள் நெஞ்சிற்குள் பதியும் ரகம்.
அதற்கு முன்பாக, ஆண்மை என்றால் என்கிற கேள்விக்கு பதிலாக, இந்த படத்தின் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்த விவேக் பிரசன்னா வே பெரிய உதாரணம் என்று சொன்னால் மிகை ஆகாது. ஆம் பல கோடி பேரை சென்றடையும் வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் ஆண்மை இல்லாதவராக நடிப்பதற்கு ஆண்மை வேண்டும்.விவேக் பிரசன்னாவிற்கு அது நிறையவே இருந்திருக்கிறது. சமூகத்தில் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்களின் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலித்திருக்கிறார் இந்த படத்தில். அவருக்கு ஜோடியாக வரும் சாந்தினி தமிழரசனும் குழந்தை இல்லாமல் தவிக்கும் தாயாக பல பெண்களின் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.
இன்னொரு பக்கம், அந்த தாய்மை பூர்ணிமா ரவிக்கு மிகவும் எளிதாக கிடைத்து விடுகிறது பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் நடுத்தர வர்க்க பெண்ணாக மிகவும் சிறப்பாக நடத்தி இருக்கிறார் பூர்ணிமா ரவி. அதுவும் திருமணம் ஆகாமலே. தான் செய்வது என்னதென்று அறியாமலே தவறு செய்யும் கதாபாத்திரத்தில் பிரதோஷ் அருமையாக நடித்திருக்கிறார்.
ஆனந்தநாக் சர்ப்ரைஸ் வில்லனாக இந்த படத்தில் முந்தைய படங்களை விட இன்னும் கொஞ்சம் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
குழந்தை இல்லை என்பது குறை அல்ல, பெற்றோர்களுக்காக ஏங்கி தவிக்கும் குழந்தைகளை புறக்கணிப்பதே குறை என்பதாக இந்த படத்தை அழகாக இயக்கியிருக்கிறார் தம்பிதுரை மாரியப்பன்.
Trauma, இந்த வலி நல்லது!