a K. Vijay Anandh review
ஒரு அழகான காதல் கதைக்குள் இப்படி ஒரு பகீர் சம்பவத்தை சொருகமுடியுமா..? அல்லது அப்படி உண்மையாகவே நடக்கும் பயங்கரமான சம்பவங்களில் காதல் இவ்வளவு அழகாக இருக்குமா..? என்று வியக்க வைத்துவிட்டார் இயக்குநர் நவீன் டி கோபால்.
மந்த்ரா, சரியான தேர்வு. இப்படி ஒரு அழகான பெண்மணிக்குள் இப்படி ஒரு கொடூர அரக்கத்தனமா என்கிற அளவிற்கு பயமுறுத்திவிடுகிறார்.
டிஜே அருணாச்சலம், ஒரு ஸ்டைலான ரொமாண்டிக்கான கிராமத்து நாயகனாக இந்தப்படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். அநியாயமா கொன்னுப்புட்டீங்களேடா என்று அழவும் வைத்துவிடுகிறார்.
ஜனனி, கூண்டுக்கிளி போன்று ஒரு கதாபாத்திரம் தான் என்றாலும், காதலுக்காக வெட்டுக்கிளியாக தாயையே வெட்டிச்சாய்க்கிறார்.
கிரேன் மனோகர் – செந்தில்குமாரி , தமிழ் சினிமாவுக்கு நல்ல ஒரு அப்பா – அம்மா காம்போ கிடைத்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய வகையில், மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
பாவல் நவ நீதன் பார்வையில் அழகாக கதை விரிகிறது, இறுதிக்காட்சி வரை சஸ்பென்ஸை கொண்டு சென்ற விதத்தில் மறுபடியும் இயக்குநர் நவீன் டி கோபாலுக்கு பாராட்டுக்கள்.
நடன இயக்குநராக பாரதி, திருவிழா பாடல்களுக்கு கச்சிதமாக நடன அசைவுகளை வழங்கியிருக்கிறார். அவை, கதையின் இறுதிக்காட்சிக்கும் வலுசேர்த்திருக்கின்றன.
உசுரே, கிராமத்து விருந்து !