ஹர்காரா

வியாபாரத்திற்கு வந்த லண்டன் கிறுத்துவனின் கோரமுகம்

61

a K.Vijay Anandh review

இந்த பாரதம் கடந்த 1200 ஆண்டுகளாக முதலில் மொகலாயர்களாலும் பின்னர் லண்டன் கிறுத்துவர்களாலும் ஆக்ரமிக்கப்பட்டு இந்த மண்ணின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இங்கிருக்கும் மக்களாலேயே அவை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. லண்டன் கிறுத்துவன் காலத்தில் போக்குவரத்திற்கான தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டதால், நாட்டின் ஒரு பகுதியில் கொள்ளையடித்த பொருட்களை துறைமுகங்களுக்கு அனுப்ப அவனுக்கு ரயில் பாதைகள் போடவேண்டியிருந்தது. அப்படி, தமிழகத்தின் பசுமை தொட்டிலான மலைகளை அழித்து ரயிலபாதை போட்டு கனிம வளங்களை திருடும் கிழக்கிந்திய கம்பெனிக்காரனின் சதியை முறியடிக்கும் ஒரு மாவீரன், அடுத்த தலைமுறைக்கு குலதெய்வமுமாகிப் போன மாதேஸ்வரனின் கதை தான் இந்த ஹர்காரா.

பிறரால் சிலுவையில் அறையப்பட்டு தன் இறைவன் உயிரிழந்ததை பார்த்தும் உலகம் முழுவதும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தாரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல கோடிகள் இருக்கும். இதோ, நம் மாதேஸ்வரனையும் அப்படி இரக்கமின்றி கழுவேற்றுகிறார்கள்.

சமகாலத்தில் அந்த மலைகிராமதிற்கு தபால்காரராக செல்லும் காளிவெங்கட் , ஒரு கடிதத்தை கொடுக்க மலையேறுகிறார். அந்த பயணத்தில் அவருக்கு வழித்துணையாக கிடைக்கும் மூர்த்தியின்  ஊடாக இந்தியாவின் முதல் தபால்காரனான மாதேஸ்வரனின் கதை விரிகிறது.

எப்படியாவது இந்த ஊரைவிட்டு சென்றுவிட வேண்டும் என்று  நினைக்கும் தபால் காரர் காளிவெங்கட்டின் மனம் மாறுகிறது. உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்ட இந்திய தபால் துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இப்படம் வெளியாகியிருக்கிறது.

காளிவெங்கட், சத்தமே இல்லாமல் பல சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிகச்சிறப்பாக நடித்து கொண்டிருக்கிறார். ஹர்காரா வில் ஒரு சர்வதேச தரத்திலான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். குணச்சித்திரம் என்று சொல்லிவிடமுடியாது. இவர், இன்றைய காலகட்ட நாயகன், முதல் தபால்காரராக நடித்திருக்கும் ராம் அருண் கேஸ்ட்ரோ, 1800 களில் வரும் நாயகன்.

ராம் அருண் கேஸ்ட் ரோ, டெயிலர் மேட் என்று சொல்லத்தக்க, அந்த கதாபாத்திரத்திற்கே உரித்தான ஆஜானுபாகுவான தோற்றம். அவர் போடும் சிலம்புச்சண்டைகள் மற்றும் குஸ்திகள் அட்டகாசமாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே கெளதமி செளத் ரி உடனான அந்த கவிதையாக வரும் காதலிலும் ஜொலிக்கிறார்.

அவரது மனைவியின் தந்தை ஒரு சுதந்திரப்போராட்ட வீரராக தனக்கென்று ஒரு சிறு கூட்டத்தை கூட்டிக்கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக செய்யும் கிளர்ச்சி திட்டங்கள் அருமையாக படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை வியாசர்பாடி பகுதிகளில் லண்டன் கிறுத்துவனின் கொடூரமான ஆட்சியில் உருவான செயற்கையான பஞ்சத்திற்கு  நம் மக்கள் பலியாகும் காட்சியை அவர் விவரிக்கும் போது, கண்கள் குளமாகின்றன. அதைக்கேட்டுதான் அதுவரை ஆங்கிலேயனுக்கு விசுவாச வேலைக்காரனாக இருக்கும் மாதேஸ்வரன் அவர்களது சதியை முறியடிக்க ஒத்துழைக்கிறான்.

அவனைப்போல பல மாவீரர்கள் இன்னுயிரை இழந்து பெற்ற சுதந்திர நாட்டில் இன்னும் பல ஆட்சியாளர்கள் அவன் விட்டு சென்ற சித்தாந்தங்களுக்கு, செக்குலார்  எனும் பெயரில் இன்னும் அடிமைகளாக இருப்பது கொடுமை. இன்னும் ஆயிரம் மாதேஸ்வரன்கள் வந்தாலும் திருந்தி அடிமைத்தனத்தை விட்டொழிவார்களா  என்று தெரியவில்லை.

ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் வெள்ளைக்காரனிடம் பணியாற்றும் கங்கானியாக இருந்துகொண்டு மக்களை வாட்டி வதைக்கும் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார்.

தேசப்பற்றையும் விதைத்து அழகான பொழுது போக்கு திரைப்படமாக அதுவும் சர்வதேச தரத்தில் இயக்கியிருக்கும் ராம் அருண் கேஸ்ட் ரோ வை எவ்வளவு கொண்டாடினாலும் தகும்.

mysixer rating 5/5